பெண் கொலை: இளைஞர் சரண்

சென்னை அருகே மதுரவாயலில் கழுத்தை நெறித்து பெண்ணை கொலை செய்ததாக இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சென்னை அருகே மதுரவாயலில் கழுத்தை நெறித்து பெண்ணை கொலை செய்ததாக இளைஞர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் முருகராஜ் (33). இவர் அந்தப் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யும்போது, அதே பகுதியைச் சேர்ந்த அன்னபூர்ணம் (34) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே தவறான உறவை ஏற்படுத்தியது.
இருவருக்குமே திருமணமாகி குடும்பம் இருக்கும் நிலையில், இருவரும் சிவகாசியில் இருந்து சென்னை மதுரவாயலுக்கு வந்து குடும்பம் நடத்தினர்.
இங்கு முருகராஜ், கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அன்னபூர்ணம், வீட்டு வேலை செய்து வந்தார். இதனிடையே அண்மை நாள்களாக முருகராஜ், அன்னபூர்ணம் மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். மேலும் மதுபோதையில் முருகராஜ், அன்னபூர்ணத்தை அடிக்கடி தாக்கவும் செய்தாராம். இதனால் அக்கம்பக்கத்தினர் இருவரையும் கண்டித்தனராம்.
இந்தக் காரணங்களால் மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் நேரு தெருவில் வசித்து வந்த இருவரும், வேறு வீட்டுக்கு இடம்பெயருவதற்காக அதே தெருவில், மற்றொரு வீட்டுக்கு முன்பணம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில் புதிதாகச் செல்ல இருக்கும் வீட்டை சுத்தம் செய்வதற்காக இருவரும் திங்கள்கிழமை இரவு அங்கு சென்றனர். அப்போது அங்கு முருகராஜூக்கும், அன்னபூர்ணத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தகராறு முற்றவே முருகராஜ், அங்கு கிடந்த வயரால் அன்னபூர்ணத்தின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்டு வெளியேறினார். மதுரவாயல் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தார் முருகராஜ்.
மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிந்து அன்னபூர்ணத்தின் சடலத்தை மீட்டனர். முருகராஜை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com