ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காததற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் சுமார் 69.12 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு வழங்கவில்லை. இதே போன்று மற்ற மாநிலங்களுக்கும் வழங்கவில்லை.
அது மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டி நிலுவைத் தொகை ரூ. 3,066 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தொகை ரூ. 200 கோடிக்கும் அதிகம். நிதி ஒதுக்கீடு செய்யாததற்கு காரணங்கள் என்னவாக இருந்தாலும் அதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. உடனடியாக ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.