சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக பொறியியல் படிப்புச் சேர்க்கைக்கு வரும் 2018-19-இல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் காட்டாங்கொளத்தூர், ராமாபுரம், வடபழனி, புதுதில்லி, அமராவதி, ஹரியானா ஆகிய வளாகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான பொது விண்ணப்பத்தை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக் கழகம் வரும் கல்வி ஆண்டில் புதியக் கல்வி பயிலும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கல்வி பாடத் திட்டத்தை அவர்களே உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் புதிதாகச் செயல்படுத்தவிருக்கும் வரன்முறைப்படுத்தப்பட்ட அனுபவ செயல்பாட்டு கல்விமுறை மூலம் தொழிற் பயிற்சி, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் கல்வி மேம்பாடு தொடர்பு ஆகியவற்றை கூடுதலாகப் பெற முடியும்.
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி மூலம் நடைபெறும் தேர்வு நாடு முழுவதும் 130 தேர்வு மையங்கள் மூலம் நடத்தப்படும். மத்தியக் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை தேர்வில் பங்கேற்கலாம்.
இந்திய மற்றும் பிற குடியுரிமை பெற்ற மாணவர்களும் வரும் 31-3-18 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், திறமையும் மிகுந்த மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை, முழு கட்டணச் சலுகை, ஆய்வு மேற்கொள்ள உதவித் தொகை, நிறுவனர் வேந்தர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உண்டு.