அரசு மருத்துவமனைகளின் செவிலியர்கள், சென்னையில் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை, தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் 525 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். சிறப்புத் தகுதித் தேர்வு மூலம் தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, இவர்கள் கடந்த 5 நாள்களாக சென்னையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், பச்சிளங் குழந்தை செவிலியர் நலச் சங்கச் செயலாளர் சுகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து சுகுமார் கூறியதாவது:
எங்களது கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர், தலைமைச் செயலருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து 10 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் உறுதியளித்தார். இதை ஏற்று போராட்டத்தை தாற்காலிகமாக கைவிடுகிறோம் என்றார்.
இதைத்தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்ட செவிலியர்களுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பழரசம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தார்.