இலங்கை மலையகத் தமிழர்களின் தலைவர் தொண்டைமான் பெயர் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மலையகத் தமிழர்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சௌமிய மூர்த்தி தொண்டைமான். சிலோன் இந்திய காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, தொடர்ந்து தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்தான் அரசு நிறுவனங்களுக்கு சௌமிய மூர்த்தி தொண்டைமானின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதனை நீக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
ஏற்கெனவே தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதிலும், ஆக்கிரமித்துள்ள தமிழர்களின் நிலங்களை விடுவிப்பதிலும், ஈழ தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை நடத்துவதிலும் இலங்கை அரசு முற்றிலும் ஒத்துழைக்க மறுத்து, தமிழர்களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் சௌமிய மூர்த்தி தொண்டைமான் பெயரை நீக்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.