ரேஷன் அட்டையில் குறைபாடுகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க சென்னையில் 17 இடங்களில் சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (நவ.10) நடைபெறவுள்ளன.
இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காண ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இந்த மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம், அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே சனிக்கிழமை (அக். 11) காலை 10 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் அட்டைகளில் பெயர் திருத்தம், நீக்கல், சேர்த்தல், முகவரி மாற்றம், கைப்பேசி எண் திருத்தம் மாற்றம் மற்றும் பொது விநியோக திட்டக் கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், வாங்கும் நுகர்வோர் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
கூறப்படும் குறைகளுக்கு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.