விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க "பிளாட்டினம் ஹவர்' என்ற திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் விபத்து காய சிகிச்சை குறித்த பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிலரங்கை தொடக்கி வைத்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
சென்னை கீழ்ப்பாக்கம், வேலூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 16 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சைக்காக சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்
ளது. இதன் தொடர்ச்சியாக புறநகர்ப் பகுதிகளிலும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 924 அவசரகால ஊர்திகள் இயங்கி வருகின்றன. கிராமப்புறங்களில் விபத்து நிகழ்ந்தால் அப்பகுதிக்கு 14 நிமிஷங்களில் அவசரகால ஊர்திகள் சென்றடையும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க "பிளாட்டினம் ஹவர்' எனப்படும் மிக வேகமான சிகிச்சை திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. இதன் அங்கமாக ஆஸ்திரேலியா-இந்தியா விபத்து காய சிகிச்சை திட்டத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியும் இணைந்துள்ளது என்றார்.
இந்தப் பயிலரங்கில் "தாய்' எனப்படும் விபத்து காய சிகிச்சை தொடர்பான செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் செய்தி, மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.