பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
பாரிமுனை தம்பு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் க.காந்தி (42). போரூர் மதனந்தபுரத்தில் என்.எஸ்.ஆர். குரூப் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜலட்சுமி நகர் நா.சுப்பையா (48), பா.சங்கர்குமார் (39), நசரத்பேட்டை கண்ணப்பன் தெரு ரா.செந்தில்குமார் (35) ஆகியோர் காந்திக்குப் பழக்கமாம். காந்தியிடம் 3 பேரும் தங்களது நிறுவனத்தின் முதலீடு செய்தால் சில மாதங்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினராம். அதை நம்பி காந்தி, ரூ.23 லட்சத்தை அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
ஆனால் மூவரும் கூறியபடி பணத்தை வழங்கவில்லையாம். முதலீடு செய்த பணத்தை திருப்பிக் கேட்டும் கொடுக்காததால், புகார் செய்தார். வடக்கு கடற்கரை போலீஸார் மூவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.