தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நடத்தும் சிறப்பு கடன் திட்ட முகாம் சென்னையில் வரும் திங்கள்கிழமை (நவ.20) தொடங்கி 5 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் சிறப்புக் கடன் திட்ட முகாம் சென்னை நந்தனம் கிளை அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.20) தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில், தனி நிறுவனங்களுக்கு ரூ.15 கோடி வரையிலும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு ரூ.30 கோடி வரையிலும் காலக் கடன்கள் வழங்கத் தேர்வு செய்யப்பட உள்ளன.
எதற்கெல்லாம் கடன் பெறலாம்? குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்க, விரிவாக்கம் செய்ய, போக்குவரத்து வாகனங்கள் வாங்க, சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதிகள், உணவகங்கள் அமைக்க, புதுப்பிக்க, விரிவாக்கம் செய்ய, காற்றாலைகளை நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய, பண்டக சாலை-கிடங்கு அமைக்க, திருமண மண்டபம்-சமூகக் கூடம்-சமுதாய மையம் ஆகியவற்றுக்கு கடனுதவி செய்யப்படும்.
தேர்வு செய்யப்படுவோருக்கு தமிழக அரசின் 3 சதவீத வட்டி மானியம், இயந்திரங்களின் விலையில் 25 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும். இம்முகாமில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படும்.
மின்சார வாரியம், குடிநீர் மற்றும் வடிகால் வாரியம், தமிழ்நாடு காகிதம் மற்றும் செய்தித்தாள் நிறுவன ஒப்பந்ததாரர்கள், பிணைய சொத்துகள் எதுவும் இன்றி பட்டியல் நிதியுதவித் திட்டத்தின்கீழ் கடன் பெற முடியும். மேலும் விவரங்களுக்கு 94450-23497, 94454-53585 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.