சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களிடமிருந்து 40 பவுன் மற்றும் ரூ.3.85 லட்சம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சென்னையைச் சேர்ந்த சுதாகர் என்பவர், செவ்வாய்க்கிழமை (அக்.2) கோயம்பேடு சந்தை அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து, ரூ.4,300 பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
உடனே சுதாகர் சத்தம் போட்டார். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த கோயம்பேடு போலீஸார், அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேரைப் பிடித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற பூனை பிரகாஷ் (24), நொளம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் (27) என்பது தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தப்பியோடிய குற்றவாளிகள் கோயம்பேட்டைச் சேர்ந்த ராஜேஷ் (25), ராகுல் (22), விஜய் (24) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், 5 பேரும் சேர்ந்து கோயம்பேடு சந்தை பகுதியில் வியாபாரத்துக்கு பணம் வைத்திருக்கும் நபர்களைக் கண்காணித்து,அவர்களிடம் பணத்தைத் திருடி வந்ததும், அப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகளைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.3.85 லட்சம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.