பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்களிலிருந்து 83 ஆயிரம் கிலோகிராம் மக்காத குப்பைகள் பெறப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன் கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலிருந்து புதன்கிழமை மட்டும் மக்காத குப்பைகளையும், பிற நாட்களில் மட்கும் குப்பைகளையும் பெறும் பணி அக்டோபர் 2 - ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, புதன்கிழமை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இல்லங்களிலிருந்து 83 ஆயிரம் கிலோ கிராம் மக்காத குப்பைகள், துப்புரவுப் பணியாளர்களால் நேரடியாக பெறப்பட்டன.
சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மட்கும் குப்பைகளை அந்தந்தப் பகுதிகளிலேயே இயற்கை உரமாக்கவும், மக்காத குப்பைகளை அதற்கென உள்ள வணிகர்களிடம் மறுசுழற்சிக்கு அளித்தும், மெல்லிய பிளாஸ்டிக் போன்ற கழிவுகள் சிறு துகள்களாக்கப்பட்டு பிளாஸ்டிக் சாலை பணிக்கும் பயன்படுத்தப்பட உள்ளன.