மஸ்கட்டில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை இரவு மஸ்கட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனை முடிந்த நிலையில், விமான நிலைய ஒப்பந்த தாற்காலிக ஊழியர் கரிகாலன் ஒரு பையை எடுத்துக் கொண்டு சென்றார். அதைப் பார்த்து சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர், அவரிடம் விசாரித்தார். அப்போது கரிகாலன், விமானத்தில் வந்த தன் உறவினர் வயதானவர் என்பதால் அவரது பையை காரில் வைக்க எடுத்து செல்வதாக கூறினார்.
ஆனால், உறவினர் பெயர், எந்த விமானத்தில் வந்தார் என்பது குறித்து கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து அந்தப் பையை சோதனை செய்த போது அதில் தலா 1 கிலோ எடையுள்ள 3 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும். இதையடுத்து கரிகாலனை சுங்க துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை வெளியே எடுத்து செல்வதற்கு அவர் உடந்தையாக இருந்துள்ளார். அவர் யாரிடம் தங்க கட்டிகளை வாங்கினார் என சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலை கொழும்பு செல்ல இருந்த விமானத்தில் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது, சம்சுதீன் ஆகியோரின் உடமைகளை ஸ்கேன் செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது. உடமைகளைப் பிரித்து பார்த்தபோது ரூ.30 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ, சிங்கப்பூர் டாலர் ஆகிய வெளிநாட்டு பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து, அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.