சென்னையில் செப்.21-இல் திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து செப்.21-ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து

திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையிலிருந்து செப்.21-ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி கருட சேவையை முன்னிட்டு, இந்த ஆண்டும் ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் சென்னையில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.
சென்னையில் 21-இல் தொடங்கி... : சென்னை பூக்கடை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் வரும் 21ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்க உள்ளது. இந்த ஊர்வலம் என்.எஸ்.சி.போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து அன்றைய தினம் மாலை 4 மணிக்கு யானை கவுனி தாண்டுகிறது. பின்னர் சால்ட் குவார்ட்டர்ஸ் (நடராஜா திரையரங்கம்), செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடைந்து இரவு தங்குதல்.
செப்.22, 23, 24-இல்...: ஐசிஎப், ஜி.கே.எம். காலனி, திரு.வி.க.நகர், பெரம்பூர், வில்லிவாக்கம், 23-ஆம் தேதி பாடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளுக்கும், 24-ஆம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களுக்கும், செப். 25-ஆம் தேதி மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானூர் சென்றடையும்.
திருமலைக்கு...: திருக்குடை ஊர்வலமானது 26-ஆம் தேதி திருமலை செல்கிறது. அங்கு மாடவீதியை வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகிறது. திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லும் இடமெல்லாம் மங்களம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திருப்பதி குடை ஊர்வலம் செல்லும் வழியெங்கும் வசிக்கும் பொதுமக்கள், ஏழுமலையான் பக்தர்கள் திருக்குடைகளை தரிசித்து, ஏழுமலையான் அருளைப் பெறலாம்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு சமர்ப்பிக்க வேண்டிய காணிக்கைகள், திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இது குறித்த சந்தேகங்களுக்கு 044- 6515 8708, 73730 99562 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com