"தூய்மையே சேவை' என்ற உறுதிமொழி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிமொழி வாசகங்கள் வாசிக்க, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள் அதனை பின்தொடர்ந்து வாசித்து உறுதியேற்றனர்.
வீடுகள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் தூய்மையைக் கடைபிடிப்போம்.
வீடுகளில் இரட்டை உறிஞ்சு குழிகளுடன்கூடிய கழிப்பறைகளைக் கட்டுவதுடன், அவ்வாறு கழிப்பறைகள் கட்டாதவர்களையும் கழிப்பறைகள் கட்டச் செய்து, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற கிராமங்களும், நகரங்களும் உருவாகப் பாடுபடுவோம்.
கை, கால்களை சுத்தமாகக் கழுவுதல், இதர சுகாதார பழக்கங்களையும் கடைப்பிடிப்போம்.
மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின்படி திட, திரவக் கழிவு மேலாண்மைத் திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும், சுகாதாரம் என்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையில், தூய்மை பாரத இயக்கத்தினை அனைத்து மக்களும் பங்கேற்கும் இயக்கமாக மாற்றுவதே "தூய்மையே சேவை' இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.