உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற நடவடிக்கையால், எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இதை உறுதியாகச் சொல்ல முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
லயோலா கல்லூரியின் வணிக நிர்வாக படிப்புக்கான நிலையத்தின்("லிபா') சார்பில், "நிதி மற்றும் பொருளாதாரத்தின் நடப்பு போக்கு' தொடர்பான கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடந்தது. இதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் பேசியது:
கணக்கில் இல்லாத பணத்தை வெளியே கொண்டுவர, உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை வரவேற்கக்கூடியது என்றாலும், கணக்கில் இல்லாத தங்கம், நிலங்கள் வெளியே வராது. அதேநேரத்தில் பணமில்லாத பரிவர்த்தனை அதிகரிக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது நல்ல விஷயம்.
திட்டமிடாததே காரணம்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், சாதாரண மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பணம் எடுப்பதற்காக வங்கிகள், ஏ.டி.எம் மையங்கள் முன்பாக பல மணி நேரம் காத்திருந்து, துன்பங்களைச் சந்தித்தனர்.
இதற்குக் காரணம் முன்னதாக திட்டமிடாமல் இருந்ததுதான். உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பணப் புழக்கம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புகள் இருந்தாலும், எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இதை உறுதியாகக் கூற முடியாது என்றார் சி.ரங்கராஜன்.