அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகனங்களை இயக்கும்போது போலீஸாரும் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
காவல்துறையில் உள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மிக முக்கியமாக இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்.
இதன் மூலம் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும். அதேபோல கார்களை இயக்கும்போது அதாவது, தனிப்பட்ட வாகனம் அல்லது காவல் துறை வாகனங்களை இயக்கும்போதும் முறையாக சீட்பெல்ட் அணிய வேண்டும்.
இப்போது நடைமுறையில் உள்ள உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென்பதே ஆகும். இந்த விதி பொது மக்களுக்கு மட்டும் இல்லை, காவல்துறையில் இருக்கும் அனைவரும் இதனைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார் டி.ஜி.பி. ராஜேந்திரன்.