சேலம் ரயில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஓராண்டுக்கு மேலாகியும் துப்புக் கிடைக்காததால், புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி, சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு அதிலிருந்த பழைய ரூபாய் நோட்டுகளில் ரூ.5.78 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீஸாôர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தற்போது புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் தலா 20 பேர் இடம்பெற்றுள்ளனர். பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ரயில் பெட்டி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், இந்தத் தனிப்படைகள் கொச்சி சென்று முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.