துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. கலந்தாய்வுக்கான தகுதிப்பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ளவர்கள் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதளங்களில் உள்ள இணைப்பில் சென்று தங்கள் சமவாய்ப்பு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 19}ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகள் 146 பேரின் பெயர்ப் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.