மருத்துவத் துறை தொடர்பாக நடத்தப்படும் பல்வேறு கருத்தரங்குகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு, புதுச்சேரி சிறுநீரகவியல் மருத்துவர்களின் 22 -ஆவது மாநாட்டைத் தொடக்கி வைத்து அவர் மேலும் பேசியது:
சிறுநீரகவியல் மருத்துவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பை உருவாக்கி, ஆண்டுதோறும் நடத்தும் இந்த மாநாட்டில் தங்களது துறையில், சர்வதேச அளவில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றம், வளர்ச்சி குறித்து பரிமாறிக் கொள்வது பாராட்டத்தக்கது.
தங்களது மருத்துவப் பயிற்சி அறிவாற்றலை இதர மருத்துவர்கள், மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் மக்களுக்குக் கூடுதலான மருத்துவச் சேவையை அளிக்க முடியும். அத்தகைய மருத்துவர்கள் கடவுளுக்கு நிகராக அல்ல, கடவுளுக்கும் மேலாக மதிக்கத்தக்கவர்கள்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள பிரபல சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் வழங்கும் அனுபவ அறிவாற்றலை மருத்துவ மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.