சென்னை அயனாவரத்தில் நகைப் பட்டறையில் வைர கற்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறியதாவது:
அயனாவரத்தைச் சேர்ந்த ராஜேஷ், நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகைப் பட்டறையில் இருந்த வைர கற்களை செவ்வாய்க்கிழமை கணக்கிட்டார். அப்போது ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 6 வைர கற்கள் திருடப்பட்டிருப்பது தெரிந்து அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராஜேஷ், அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நகைப் பட்டறையில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 பவுன் வழிப்பறி: சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சத்தியலட்சுமி (45), புதன்கிழமை மே தினப் பூங்கா அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், சத்தியலட்சுமி அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல திருவல்லிக்கேணி பெரிய மசூதி அருகே நடந்து சென்ற பொட்டியம்மாள் (65) என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.