சென்னை அருகே புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்ப ராவ் மகன் கணேஷ் (27). இவர், கடந்த 2016, ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி போதைப் பொருள் கடத்தியதாக, மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணேஷை சந்திக்க உறவினர்கள் யாரும் வரவில்லையாம். அதனால், கணேஷ் சோகத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில், அவர் புதன்கிழமை காலை பிளேடால் தனது இடது கை நரம்பை அறுத்துக்கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறைக் காவலர்களும், சக கைதிகளும் கணேஷை மீட்டு சிறைக்குள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
பின்னர், கணேஷ் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கணேஷ் புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து சிறைத்துறையினர்அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.