சென்னை மயிலாப்பூரில் இரு வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
மயிலாப்பூர் சாட்சி அருணாச்சலம் தெருவைச் சேர்ந்த மாதபத் (65) , தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், மஹாளய அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்றார். பின்னர் அவர், இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மாதபத் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 பவுன் திருட்டு: மயிலாப்பூர் பஜார் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (25). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாபு, செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.