தலைமறைவாக இருந்த ரௌடி கைது

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரௌடியை போலீஸார் திருவள்ளூர் அருகே திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரௌடியை போலீஸார் திருவள்ளூர் அருகே திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: 
புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (எ) பாம் சரவணன் (42). இவர் மீது கே.கே. நகர், நீலாங்கரை, புளியந்தோப்பு, எம்.கே.பி. நகர் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்டவை தொடர்பாக 24 வழக்குகள் உள்ளன. இவற்றில் எட்டுக்கும் மேற்பட்டவை வெடிகுண்டு தொடர்பான வழக்குகளாகும். மேலும் சரவணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 6 முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சரவணன், எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ரௌடி நாகேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக புளியந்தோப்பு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், சரவணனை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே சரவணன், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஒரு வாடகை வீட்டில் வசிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அந்த வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி வளைத்த போலீஸார், அங்கிருந்த சரவணனை கைது செய்தனர். அப்போது அவரது கூட்டாளிகள் தப்பியோடிவிட்டனராம். கைது செய்யப்பட்ட சரவணனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com