சென்னை வடபழனி பகுதியில் வீடு புகுந்து தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
வடபழனி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் பகுதியில் தொடர்ச்சியாக வீடுகளின் கதவு பூட்டை உடைத்து, நகை, பணம் திருடு போனது. தொடர் திருட்டில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வடபழனி போலீஸார், ஆற்காடு சாலை-துரைசாமி சாலை சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த நெற்குன்றம் மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ப.அப்பு என்ற இளவரசன் (32), வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ர.சந்தோஷ் (எ) ராஜா (19) ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் அப் பகுதியில் வீடு புகுந்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 42 பவுன் தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இருவரும் வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளில் சுமார் 14 வீடுகளில் திருடியிருப்பதும், திருட்டில் கிடைக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க நாணயங்களாக வைத்திருந்ததும், தேவைக்கு ஏற்ப தங்க நாணயங்களை இருவரும் விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இளவரசன், ஏற்கெனவே கடந்த 2016-ஆம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.