சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தந்தை, மகன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வண்ணாரப்பேட்டை என்.எம். கார்டன், எம்.சி. சாலைப் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவதாக வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், அக்கடையை ஆய்வாளர் ஜவஹர் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை கண்காணித்தனர்.
இதில் அந்த டீக்கடையில் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸார், ஐ.பி.எல் சூதாட்டம் நடத்திய அந்தக் கடையின் உரிமையாளரான செரீப் (66), அவரது மகன் அபுதாகீர் (32) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், இருவரும் ஐ.பி.எல். போட்டித் தொடர் தொடங்கிய நாளில் இருந்து சூதாட்டம் நடத்தி வருவதும், சூதாட்டம் நடைபெறுவது குறித்து கட்செவி அஞ்சல் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி அவர்களை அழைப்பதும், போட்டியில் வீரர்கள் அவுட்டாவது, அணிகள் வெற்றி பெறுவது, வீரர்கள் சிக்சர், பவுண்டரி அடிப்பது ஆகியவற்றை மையமாக வைத்து சூதாட்டம் நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் யார், யாரெல்லாம் பணம் செலுத்தி சூதாட்டத்தில் பங்கேற்றார்கள் என்ற விவரங்களை போலீஸார் திரட்டி வருகின்றனர். மேலும் இதேபோன்று வேறு எங்கும் ஐ.பி.எல். சூதாட்டம் நடைபெறுகிறதா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.