பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் சென்னையில் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல், பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம்களை ஒவ்வொரு மாதமும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உணவுப்பொருள் வழங்கல் துறையானது, சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளைக் கேட்டு பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் மாதத்துக்கான குறைதீர் கூட்ட முகாம்கள் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்திலேயே சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.