சென்னையில் பள்ளி மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக, கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மதுரவாயல், நெற்குன்றம் மேட்டுகுப்பம் அருகே உள்ள தேவி கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் சு.விக்னேஷ் (21). இவர், வளசரவாக்கத்தில் உள்ள 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் முகநூல் மூலம் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினராம். இந்நிலையில் அந்த மாணவி, அண்மையில் வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு சென்ற விக்னேஷ், மாணவியை ஆபாச புகைப்படமும், ஆபாச விடியோவும் எடுத்தாராம். இதன் பின்னர் அந்த மாணவியை தொடர்பு கொண்ட விக்னேஷ், ஆபாச புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிடாமல் இருப்பதற்கு ரூ.5 லட்சம் தரும்படி கேட்டு மிரட்டல் விடுத்தாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
உடனடியாக அவர்கள், வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸார் விக்னேஷ் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர், வடபழனி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., இரண்டாமாண்டு படித்து வருகிறார்.