பெருநகர சென்னை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், திருநங்கைகள் அடங்கிய மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடனுதவி அளிக்கப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தி, தேசிய மாணவர் படை, சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்: தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், திருவொற்றியூர் மண்டலம், 3-ஆவது வார்டில் திருநங்கைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட மாதா மகளிர் சுய உதவிக் குழுவுக்கு வட்டி மானியத்துடன் கூடிய வங்கிக் கடனாக ரூ.1.20 லட்சத்துக்கான காசோலையையும், தனிநபர் சுயதொழில் புரிந்திடும் வகையில் 2 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும் ஆணையர் வழங்கினார்.
துணை ஆணையர்கள் எம்.கோவிந்த ராவ், மகேஸ்வரி ரவிக்குமார், பி.மதுசுதன் ரெட்டி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.