ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை கொண்ட பசுமைக் கலைப் பூங்கா பொது மக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை திறக்கப்பட்டது. இந்த பூங்கா புதிய ஆவடி சாலையில், ஐ.சி.எஃப் சென்னை ரயில் அருங்காட்சியகம் முன்பு இடம்பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், சுற்றுப்புறங்களை அழகுபடுத்தவும் ஐ.சி.எஃப். நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரயில் பெட்டித் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் உபயோகமற்ற உதிரி பாகங்களைக் கொண்டு சிறந்த கலை வல்லுநர்களால் 11 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டன. இந்த சிற்பங்கள் அடங்கிய பசுமைக் கலைப் பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு வியாழக்கிழமை அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த பூங்கா புதிய ஆவடி சாலையில், ஐ.சி.எஃப். சென்னை ரயில் அருங்காட்சியகம் முன்பு இடம்பெற்றுள்ளது. இந்த சிற்பங்கள் செழியன், மரிய அந்தோணிராஜ், ஜேகப் ஜெபராஜ், ரவீந்திரன், தேஜோமயி மேனன், சாலினி பிஸ்வஜித், அஸ்மா மேனன் போன்ற தலைசிறந்த சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஐ.சி.எஃப் அதிகாரி கூறியது:
இந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள சுமார் 5,000 சதுர மீட்டர் பரப்புள்ள பசுமைப் பூங்கா அமைந்துள்ள இடம் சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்துக்கு சொந்தமானது. சென்னை மெட்ரோ வாட்டர் மற்றும் மும்பையை சேர்ந்த ஓரியன்டல் வெனீர் நிறுவனத்துடன் இணைந்து ஐ.சி.எஃப். இந்தப் பணிகளை மேற்கொண்டுள்ளது. சிற்பங்கள் அடங்கிய இந்த பூங்கா இப்பகுதிக்கு அழகு சேர்ப்பதுடன், இந்த இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளவும் உதவும் என்றார் அவர்.