தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் காஸா கிராண்டே இணைந்து நடத்தும் வீட்டு மனை கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கவுள்ளது.
சென்னையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், ஆண்டுதோறும் வீட்டு மனைக் கண்காட்சியை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது.
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கும் முதல் நாளில் வீடு மற்றும் மனை விற்பனையை முன்னிட்டு தொடங்கப்படும் இந்தக் கண்காட்சி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன.
இலவசம்: இந்தக் கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். கண்காட்சியில் 40 -க்கும் மேற்பட்ட கட்டுமான உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதியுதவி அரங்குகள் அமைக்கப்பட்டு, அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் மனைகள் வாங்க கடன் வசதி செய்தி தரப்படவுள்ளது.
மேலும், குறைந்த விலையில், திருப்பிச் செலுத்தக் கூடிய எளிமையான தவணை முறையில் வீட்டு மனைகள், உயர் வருவாய் பிரிவினர் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஏற்ற அடுக்குமாடிக் குடியிருப்புகள், உடனே வீடு கட்டி குடியேற ஏதுவான மனைகள் மற்றும் நாளைய முதலீடுகளுக்கான வீட்டு மனைகள் கொண்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தோடு காஸாகிராண்டே, விஜிஎன் குழுமம், ரெப்கோ ஹவுசிங் ஃபைனான்ஸ், அசோக் நந்தவனம், அமர் பிரகாஷ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்துகின்றன.