தமிழகம் முழுவதும் முடிதிருத்தும் கட்டணம் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்த மாநில சவரத் தொழிலாளர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்க முன்னேற்ற பேரவையின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொது செயலாளர் பனையூர் ஜி.வி.சீனிவாசன் கூறியதாவது:
கடை வாடகை ஆண்டுக்கு ஒருமுறை ஏற்றப்படுவதாலும், அழகு சாதன பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாலும் முடிதிருத்தும் கட்டணம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.
கட்டிங் அண்டு ஷேவிங் கட்டணம் ரூ.170 (பழைய கட்டணம் ரூ.150), கட்டிங் ரூ.120 (80, 90), தாடி ஒதுக்குதல் ரூ.80 (60, 70), தலையில் ஆயில் மசாஜ் ரூ.170 (130, 140), பிளீச்சிங் ரூ.500 முதல் ரூ.1,200, ஷேவிங் 70, சிறுவர் கட்டிங் 100 (80) ஹேர் டை மட்டும் ரூ.170 (150), ஃபேசியல் ரூ.700 முதல் ரூ.2000 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தியாகி விஸ்வநாத தாஸுக்கு சென்னையில் உருவச்சிலை அமைக்க வேண்டும், அவரது பிறந்தநாளான ஜூன் 16-ஆம் தேதியை நாடகக் கலைஞர்கள் தினவிழாவாக அறிவிக்க வேண்டும்; கல்வி, வேலைவாய்ப்பில் மருத்துவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.