சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க அனைத்து வாகன ஓட்டிகளும் தலைக்கவசம் அணிவது அவசியம் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
வாகன ஓட்டிகள் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் தொடங்கி வைத்தார்.
அந்த வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களின் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதத் தொகைக்கான ரசீதை அவர்களிடம் கொடுத்தனர். இதையடுத்து அந்த வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள், தலைக்கவசம் ஆகியவற்றை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா வழங்கினார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நிகழாண்டில் நடைபெற்ற இருசக்கர வாகன விபத்துகளில் 726 பேர் உயிரிழந்தனர். அதில் 98 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியவில்லை. விலை மதிப்பில்லாத உயிரைப் பாதுகாக்கும் வகையில் வாகன ஓட்டிகள் தலைக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்றனர். சென்னையில் கோயம்பேடு, தியாகராயநகர் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.