சென்னை கொளத்தூரில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 25 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கொளத்தூர் சரோஜினி நகர் 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் முரளி பாஸ்கர் (39). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். முரளி இரு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் திருப்பதி சென்றார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொளத்தூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.