ஆன்லைன் மூலம் மட்டுமே பத்திரப் பதிவு செய்யப்படும் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாகக் கூறி திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலகம் முன் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பத்திர எழுத்தர்கள் சங்க மாநில நிர்வாகி நீலகண்டன் கூறியது:
திருவொற்றியூர் சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் 52 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன. மாதத்துக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திர பதிவுகள் நடைபெறும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் மட்டுமே பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதற்கு தீர்வு காண்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இதனால் ஒரு நாளில் ஒருசில பத்திரங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். கணினி சர்வர் அடிக்கடி செயலிழந்து போவதால் பத்திரங்கள் பதிவு செய்வதில் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே முழுமையான, தடையற்ற தொழில்நுட்பம் தயாராகும் வரை ஆன்லைன் முறையை கைவிட்டு, பழைய முறையிலேயே பத்திரப் பதிவுகளை தொடர வேண்டும் என்றார் நீலகண்டன்.
ஆர்ப்பாட்டத்தையடுத்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை திருவொற்றியூர் சார்பதிவாளரிடம் அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.