சென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல துணிக் கடையில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள ஒரு துணிக் கடை வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணியளவில் அந்த ஜவுளிக் கடையில் சோதனை நடத்தச் சென்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கு சோதனை நடத்துவதற்காக கடையில் இருந்த வாடிக்கையாளர் அனைவரையும் வெளியேற்றினர்.
அதேபோல கடையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அங்குள்ள அலுவலக அறையில் உட்கார வைக்கப்பட்டனர். பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த கடையில் இருந்த பில் புத்தகங்கள், ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் சந்தேகத்துக்குரிய சில முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சோதனை இரவையும் தாண்டி நீடித்தது. சோதனையின் முடிவிலேயே வரி ஏய்ப்பு செய்யப்பட்டதா என்ற விவரம் தெரியவரும் என வருமானவரித் துறையினர் தெரிவித்தனர். இந்த சோதனையின் காரணமாக, அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.