பூமி தோன்றியது முதல் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் வரை உலக வரலாறு குறித்து, ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் உலக வரலாறு பற்றி வெளிவந்துள்ள நூல்கள் மிகக்குறைவு. அந்தக் குறையைப் போக்கும் விதத்தில் தற்போது பூம்புகார் பதிப்பகத்தார், உலக வரலாறு குறித்த நூலை முழுவதும் வண்ணத்தில் கொண்டு வந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும், தினந்தந்தியின் ஆசிரியராக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவருமான ஐ.சண்முகநாதன் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
'உலகம்' தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி, உலகில் நடந்த பல முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக் கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற உலகை உலுக்கிய, கவனத்தை ஈர்த்த முக்கிய சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
'இந்தியா' தலைப்பில் குமரிக் கண்டம் தொடங்கி, ஜெயலலிதா மரணம் வரையிலான செய்திகள் இடம்பிடித்துள்ளன. நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ளக்கூடிய தகவல்களை, இந்த ஒரே நூல் மூலம் அறியலாம். 624 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
'வரலாற்று மாணவருக்கே வியப்பூட்டும் பல செய்திகள் உலகெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. தெளிந்த நடையில், குளிர்ந்த மொழியில் அபூர்வத் தகவல்கள் விதைக்கப்பட்டிருக்கின்றன' என்று அணிந்துரையில் கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டிருப்பது உண்மையின் உரைக்கல்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நூல் நிலையங்களில் இடம் பெறவேண்டிய புத்தகம்.