ஆக்கிரமிப்புகள் புற்றுநோய் போல் பரவி வருவதாக வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்குப் பதில் அவற்றை உடனடியாக இடிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.
சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள நாரவாரிக்குப்பத்தைச் சேர்ந்த ராஜப்பா, ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்பு அங்காடிக்காக 3 மாடிக் கட்டடம் கட்டினர். விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜப்பா மற்றும் ஜெயலட்சுமி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எஸ்.வைத்தியநாதன் அடங்கிய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'புற்றுநோயைப் போல் பரவி வரும் ஆக்கிரமிப்புகளைத் தடுக்காவிட்டால், எல்லா பொது இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சுவாசிக்க இடமில்லாத நிலைக்குத் தள்ளப்படுவோம். மனுதாரர் விதிமுறைகளை மீறிக் கட்டடம் கட்டியுள்ளார். எனவே விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தை ஒருமாத காலத்துக்குள் இடிக்க வேண்டும் .
ஒருவேளை 30 நாள்களுக்குள் கட்டடத்தை இடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
கட்டடத்தை இடிக்கத் தேவையான பாதுகாப்பை காவல்துறை ஆணையர் வழங்க வேண்டும் எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர். தமிழக அரசு விதிகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களை வரன்முறை செய்வதை விடுத்து இடிக்க உத்தரவிட வேண்டும். மேலும் நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே தங்களது கருத்து என உத்தரவில் குறிப்பிட்டனர்.