சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளைமேடு திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (32). இவர் கடந்த 15-ஆம் தேதி சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் நடந்து செல்லும்போது, அங்கு வந்த 3 பேர் ஜேம்ஸிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம், விலை உயர்ந்த செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
இதில், வழிப்பறியில் ஈடுபட்டது மாதவரம் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த அ.உமர்பாட்ஷா (27), திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள காவனூரைச் சேர்ந்த வே.சரவணன் (27), மதுரவாயல் தனலட்சுமிநகர் 10-ஆவது தெருவைச் சேர்ந்த நெ.தமிழ்செல்வன் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு கார், 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்பு இருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல கே.கே.நகர், அசோக்நகர், வடபழனி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகரைச் சேர்ந்த ஜீ.தினேஷ்குமார் (27), அதேப் பகுதியைச் சேர்ந்த செ.விக்னேஷ் (19) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.