மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள்தான் வரலாற்றில் தொடர்ந்து போற்றப்படுகிறார்கள். அத்தகையவர்களின் வரிசையில் காமராஜர் இடம் பெற்றுள்ளார் என்று நடிகர் ராஜேஷ் புகழாரம் சூட்டினார்.
மக்கள் அரசியல் விழிப்புணர்வுப் பயிலரங்கம் சார்பில் காமராஜர் பிறந்த தின விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் இரா.மனோகர் தலைமை வகித்தார். இதில் நடிகர் ராஜேஷ் கலந்து கொண்டு நரிக்குறவர் இனத்தின் முதல் பொறியியல் பட்டதாரியான திருச்சியைச் சேர்ந்த ஸ்வேதாவுக்கு ரூ. 1 லட்சம் பண முடிப்பும், காமராஜர் நினைவு விருதும் வழங்கி பேசியது:
நரிக்குறவர் சமுதாயத்திலிருந்து ஒரு பொறியாளராக ஸ்வேதா உருவெடுத்துள்ளார். தான் கற்றதோடு மட்டுமல்லாது திருச்சியை அடுத்த தேவராயநேரியில் நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் திருவள்ளுவர் குருகுல ஆரம்பப் பள்ளி ஒன்றையும் ஸ்வேதா நடத்தி வருகிறார். எனவே அவருக்கு கல்விக் கண் திறந்த காமராஜர் விருது வழங்கப்படுவது பொருத்தமானதுதான்.
மக்களுக்காக உழைத்தவர்கள்தான் வரலாற்றில் தொடர்ந்து போற்றப்பட்டு வருகிறார்கள். இந்த வரிசையில் காமராஜர் இடம் பெற்றதால்தான் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவரது புகழ் மங்காமல் ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது என்றார் ராஜேஷ்.
காங்கிரஸ் கமிட்டி இலக்கிய அணித் தலைவர் நாஞ்சில் கி.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.