உயர் கல்வி ஆணையம் அமைப்பதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்விக்கும் நிதியுதவி வழங்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பல்கலைக்கழக மானியக்குழுவை ஒழித்துவிட்டு, உயர் கல்வி ஆணையம் ஒன்றை அமைப்பதற்கு மத்திய பாஜக அரசு முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உயர் கல்வி ஆணையம் 14 உறுப்பினர்கள் கொண்ட அமைப்பாக இருக்கும். ஆனால், அதில் மாநிலப் பிரதிநிதி ஒருவர்கூட இருக்கமாட்டார். அந்த 14 பேர் கொண்ட ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க ஐந்து பேர் கொண்ட தேடுதல் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படும். அதிலும் ஒருவர்கூட மாநிலத்தின் சார்பில் பிரதிநிதியாக இருக்கமாட்டார் என்பது உயர் கல்வி ஆணையம் முழுக்க முழுக்க மத்திய அரசின் கைப்பாவையாகவே இயங்கும் என்று வரைவு மசோதா தெளிவுபடுத்துகிறது.
மத்திய அரசு கொண்டு வரும் உயர் கல்வி ஆணையம், ஏற்கெனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பாதிப்பைவிட மிக மோசமான பாதிப்புகளை நாட்டின் உயர் கல்வியில் ஏற்படுத்திவிடும். மாநிலத்தின் கல்வி உரிமைக்கு மாறான மசோதாவை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தவறினால், மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி, மாநிலங்களவையில் திமுக உயர் கல்வி ஆணைய வரைவு மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தும்.