கை மாற்று அறுவைச் சிகிச்சை செய்த இளைஞருக்கு இயன்முறை மருத்துவம்
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைகள் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளைஞருக்கு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாராயணசாமியை அமைச்சர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து அமைச்சர் கூறியது:
2015-ஆம் ஆண்டு மின்சார விபத்தினால் இரு கைகளையும் இழந்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி. அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இந்தியாவில் அரசு மருத்துவமனையில் முதன்முறையாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாகப் பெற்ற கைகள் பொருத்தப்பட்டன. இந்தியாவில் அரசு மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சை நடைபெறுவது இதுவே முதன்முறை.
தற்போது நாராயணசாமி நலமுடன் உள்ளார். அவருக்கு கைகளை இயக்கக்கூடிய வகையில் இயன்முறை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவர்களும் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்
மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பல நமச்சிவாயம், துணை முதல்வர் டாக்டர் செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.