சென்னை தரமணி கொட்டிவாக்கத்தில் குடும்பப் பிரச்னையில் ஒன்றரை வயது குழந்தையைக் கொன்று, தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் 9-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கணபதி (39). இவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கணபதியின் மனைவி சுமித்ரா (26). இவர்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் கிருதேஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், கணபதி, தனது மனைவி சுமதியிடம் குழந்தையை சரியாக கவனிப்பது இல்லை என கூறி வந்தாராம். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கணபதி செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருந்த போது அவரது உறவினர் ஒருவர், வீட்டுக்கு நண்பகல் வந்தார்.
அப்போது வீட்டில் ஒன்றரை வயது கிருதேஷ் தூக்கிட்டு கொலை செய்யப்பட்டும், சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தரமணி போலீஸார், இருவர் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்னையின் காரணமாக சுமித்ரா, ஒன்றரை வயது குழந்தையை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தாம்பரம் கோட்டாட்சியரும் விசாரணை செய்து வருகிறார்.