உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை இணைப்பதிலும், புதிய உறவுகளை வளர்ப்பதிலும் சுற்றுலாவின் பங்கு மகத்தானது என திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூறினார்.
சென்னை, காமராஜர் அரங்கில் மதுரா டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் சிறந்த சுற்றுலா அமைப்புகளுக்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரா டிராவல்ஸ் நிறுவனத் தலைவர் வி.கே.டி.பாலன் தலைமை வகித்தார். பின்னணிப் பாடகி பி.சுசீலா, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பயிற்சியாளர் ஞானாம்பாள், இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி, மத்திய சுற்றுலாத் துறையின் தென்பிராந்திய இயக்குநர் ஸ்ரீவத் சஞ்சய் வஸ்தவா உள்ளிட்டோர் விருதுகளை வழங்கினர்.
மக்களை இணைக்கும் சுற்றுலாஎஸ்.பி.முத்துராமன் பேசியது:
சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது ஒரு பகுதி மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, காலநிலை ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவுகிறது. உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களை இணைப்பதிலும் புதிய உறவுகளை வளர்ப்பதிலும் சுற்றுலா முக்கியப் பங்கு வகிக்கிறது. கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) போன்ற நவீனதொழில்நுட்பத்தால் பல நன்மைகள் இருந்தாலும், ஒன்றுகூடி கலைந்துரையாடும் பாங்கு குறைந்து கொண்டே வருகிறது. இதை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொண்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்' என்றார்.
ஈஷா யோகா மையத்துக்கு விருது: சுற்றுலாத் துறையில் சிறந்து விளங்கும் போக்குவரத்து நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா அமைப்பினர் ஆகிய 100 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், யோகாவுக்கான சிறந்த தலத்துக்கான விருது கோவை ஈஷா யோகா மையத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலரும், டி.ஐ.நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான வெள்ளையன் சுப்பையா பெற்றுக் கொண்டார்.