ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாலும் அவரை பணிநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுப்பணித்துறையில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த எஸ்.பி.சிதம்பரம் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அரியலூர் சிறப்பு நீதிமன்றம் சிதம்பரத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அவரை பணிநீக்கம் செய்து பொதுப்பணித் துறைச் செயலாளர் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சிதம்பரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ""விசாரணை நீதிமன்றத்தில், தான் செய்த குற்றத்தை மனுதாரர்
ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.
இந்த வழக்கை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை தெரிவித்துள்ளார். சிறைத் தண்டனையை மட்டுமே உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. தண்டனை என்பது மேல்முறையீட்டின் ஒரு பகுதிதான். எனவே,அவரை பணிநீக்கம் செய்தது சரிதான். எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்றார் நீதிபதி.