காவல்துறை அதிகாரி சீருடையில், அரசு குறித்து அவதூறான கருத்து தெரிவித்த சின்னத்திரை நடிகை மீது, சென்னை வடபழனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இச்சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல மாநிலம் முழுவதும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தமிழக காவல் துறையின் உதவி ஆணையர் சீருடை அணிந்த ஒரு பெண் பேசும் விடியோ காட்சி புதன்கிழமை வைரலாக பரவியது. அதில் தமிழக அரசைக் கண்டித்தும், அரசை அவதூறு செய்யும் வகையிலும் அந்த பெண் பேசியிருந்தார். இந்தக் காட்சியை பார்த்த காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உடனடியாக உத்தரவிட்டனர். விசாரணையில், அந்த விடியோ காட்சியில் பேசுவது வடபழனி பகுதியைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை நிலானி என்பதும், சின்னத்திரை படப்பிடிப்புக்காக அணிந்திருந்த காவல் துறை அதிகாரி சீருடையில் அந்த விடியோ காட்சியை பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்திருப்பதும் தெரிய வந்தது
இந்நிலையில், சென்னை அருகே மாங்காடு பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவர், வடபழனி காவல் நிலையத்தில் நிலானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நிலானி மீது 4 கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.