கல்வி உதவித்தொகை முறைகேடு: பதிலளிக்க அரசுக்கு உத்தரவு
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, தமிழக அரசு மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவில், "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர்கல்விக்கான உதவித்தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரம் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தணிக்கைத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வரும் டிசம்பர் 10 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.