சென்னையில் அரசுப் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி இளைஞர் சாகசம் செய்யும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதால், அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பாட்டுப்பாடி நடனமாடுவது, படிக்கட்டில் தொங்கியபடி சாகசம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கல்லூரி மாணவர்கள் என்ற போர்வையில், சில இளைஞர்களும் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சென்னையில் ஒரு இளைஞர், அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் கால் வைத்துக் கொண்டு வாசலில் தொங்கியபடி சாகசம் செய்யும் காட்சி முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக திங்கள்கிழமை பரவியது.
சைபர் குற்றப்பிரிவு விசாரணை: இதைப் பார்த்த சென்னை காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளனர்.