எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எம்.டி.கோரல் ஸ்டார்ஸ்' கப்பலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு துறைமுகக் கடல் பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
காமராஜர் துறைமுகம் சென்னைக்கு அருகே எண்ணூரில் அமைந்துள்ளது. இங்கு எண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட் என்ற தனியார் கடல்சார் திரவ முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எரிவாயு, எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு "எம்.டி. கோரல் ஸ்டார்ஸ்' கப்பல் 15 ஆயிரம் டன் பர்னஸ் ஆயிலுடன் (உலை எண்ணெய்) காமராஜர் துறைமுக முனையத்தை வந்தடைந்தது.
இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு உலை எண்ணெயை அனுப்பும் பணி தொடங்கியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஒரு இணைப்புக் குழாய் கழன்று விழுந்தது. இதையடுத்து எண்ணெய் கடலுக்குள் பீரிட்டுக் கொட்டத் தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறுவதை நிறுத்தினர். இணைப்புக் குழாய் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருசில நிமிடத்திலேயே சுமார் 2 ஆயிரம் கிலோ எண்ணெய் கடலில் கொட்டியது.
எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி: எண்ணெய்க் கசிவு குறித்து துறைமுக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோரக் காவல்படையின் இரு ரோந்துக் கப்பல்கள், சென்னைத் துறைமுகத்தின் எண்ணெய்க் கசிவு அகற்றும் வாகனங்கள் எண்ணூர் துறைமுகத்துக்கு விரைந்து வந்து எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபடத் தொடங்கின.
சிறப்புக் கப்பல் சமுத்ரா பகெரேதார் வருகை: எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் பணி நடைபெறும் நிலையில், மேலும் உதவிடும் வகையில் கடலோரக் காவல் படையின் மாசுக் கட்டுப்பாட்டு சிறப்புக் கப்பலான "சமுத்ரா பகெரேதார்' விசாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. எத்தகைய எண்ணெய்,
ரசாயனப் படலங்களையும் தண்ணீரிலிருந்து பிரித்து அழிக்கும் தன்மை கொண்ட அதிநவீன உபகரணங்கள் இக்கப்பலில் இடம்பெற்றுள்ளன.
இதன் உதவியுடன் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு முற்றிலும் அகற்றப்படும். இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
20 மாதங்களுக்கு முன்பு...
எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கப்பல்கள் வந்து செல்லும் கால்வாயில் பி டபுள்யூ மாப்பிள், எம்.டி டான் காஞ்சிபுரம் ஆகிய இரு கப்பல்கள் கடந்த 2017 ஜனவரி 28 அதிகாலையில் மோதிக்கொண்டன. இதில் சேதமடைந்த டான் காஞ்சிபுரம் கப்பலிலிருந்து சுமார் 160 மெட்ரிக் டன் பர்னஸ் ஆயில் நடுக்கடலில் கொட்டி எர்ணாவூர் கடற்கரையில் ஒதுங்கியது. இதை அகற்ற சுமார் 2 மாதங்கள் ஆகின. இந்தஎண்ணெய் கசிவால் மீன்கள் இறந்து வாழ்வாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து டான் காஞ்சிபுரம் கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் இழப்பீடு வழங்க டான் காஞ்சிபுரம் கப்பல் நிர்வாகம் ஒப்புக்கொண்டதையடுத்து இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.