கஜா புயல் பாதிப்பு காரணமாக இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ.20) நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
ஏற்கெனவே, வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கள்கிழமை நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இப்போது செவ்வய்க்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளையும் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
இத் தேர்வுகள் டிசம்பர் 17 ஆம் தேதி நடத்தப்பட உள்ளன. மேலும், நவம்பர் 22 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலிடெக்னிக் தேர்வுகள்: புயல் பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு கடந்த வியாழன், வெள்ளி, சனி மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் இன்னும் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பாலிடெக்னிக்குகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த தேர்வுகளையும் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் ஒத்திவைத்துள்ளது.