வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் சென்னையில் வியாழக்கிழமை தர்ணா
நடத்தினர்.
வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கை விட வேண்டும்; வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத பெரிய நிறுவனங்களின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்;
அவற்றின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்; பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி மூலதனம் அளித்து அவற்றை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு செயலாளர் ஆர்.சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில், ஆர்.சேகரன் பேசியது:
பரோடா வங்கி, விஜயா வங்கி,தேனா வங்கி ஆகியவற்றை இணைப்பது என்ற தமது முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். விவசாயம், சிறு, குறு தொழில்கள் செய்து வருவோர் உள்ளிட்டோருக்கு பொதுத்துறை வங்கிகள்தான் வங்கி சேவைகளை அளித்து வருகின்றன. ஆயிரக்கணக்கான கிளைகள் மூடப்படும்போது, இந்த மக்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்படும்.
இதனால் இவர்கள் அதிக வட்டி விதிக்கக்கூடிய தனியார் வங்கிகளை நோக்கி தள்ளப்படுவார்கள்.
எனவே விவசாயிகள், சிறு குறு தொழில் புரிபவர்கள், மகளிர் சுயஉதவி குழுக்கள், வணிகர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு தொடர்ந்து வங்கி சேவைகள் கிடைத்திட, வங்கிகளை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். பெரு நிறுவனங்களிடமிருந்து வாரா கடன்களை கடுமையான சட்டங்கள் மூலம் வசூல் செய்ய வேண்டும் என்றார் அவர்.